அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாத எடப்பாடி கே பழனிசாமி, உங்களுக்கு இதெல்லாம் புரிந்தாலே ஆச்சரியம் - செந்தில் பாலாஜி
அணில் ஏறுவதால் மின்வெட்டு என்பது கேலிக்கூத்தானது என்று எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பேசியிருந்த நிலையில் அதற்கு பதிலளித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.
இன்று செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள், “அணில் ஏறுவதால் மின்வெட்டு என்பது கேலிக்கூத்தானது. கடந்த ஆட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்ற சேவை அடிப்படையில்தான் மின்வாரியத்திற்கு கடன் ஏற்பட்டது” என்று பேசியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் டிவிட்டரில், “13 அப்பாவி தமிழர்கள் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதை டிவி பார்த்து தெரிந்துக்கொண்ட, கம்பராமாயணத்தை சேக்கிழார் எழுதினார் என கண்டுப்பிடித்த எடப்பாடி கே பழனிசாமி, இப்பொழுது மின்சாரத்தில் இயங்கும் டிவியை பார்த்து மின்தடை இருப்பதை கண்டறிந்திருக்கிறார்.
முதலில் எடப்பாடி கே பழனிசாமியின் ஆட்சியில் மின் உற்பத்திக்காக துவங்கப்பட்ட புதிய மின் திட்டங்கள் எவை? திட்டங்களின் மதிப்பீடு என்ன? அதற்காக செலவு செய்யப்பட தொகை எவ்வளவு? அந்த திட்டங்களின் இன்றைய நிலையென்ன என்பதை தமிழக மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
மேதகு ஆளுநர் உரையில் குறிப்பிட்டது போல் கடந்தகால ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகள், தவறுகள், நிதிநெருக்கடிகள் தொடர்பாக மின் துறையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் அணில்கள் உள்ளிட்ட உயிரினங்கள் கம்பிகளில் படுவதாலும் மின்தடை ஏற்பட்டிருக்கின்றனவென எடப்பாடி கே பழனிசாமி ஆட்சியிலேயே உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தீர்கள். அது பொய்யா?
மின் பராமரிப்பு பணிகளுக்காக 19.06.2021 முதல் 28.06.2021 வரை 10 நாட்களாக மின்வாரியம் எடுத்துக் கொண்ட பணிகள் 2,28,000 ஆயினும் முடிக்கப்பட்ட பணிகள் 2,71,000. ஏறத்தாழ 42,000 கூடுதலாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதனை முதலில் அறிந்துக்கொள்ளுங்கள். ஆயினும் அபிராமி லிங்கனுக்கும், ஆபிரகாம் லிங்கனுக்கும் வேறுபாடு தெரியாத எடப்பாடி கே பழனிசாமி, உங்களுக்கு இதெல்லாம் புரிந்தாலே ஆச்சரியம்” என்று பதிவிட்டுள்ளார்.
