ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயர் மாற்றம்! - பிரதமர் மோடி
ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மேஜர் தயான்சந்த் விருது என மாற்ற இந்தியா முழுக்க இருந்து ஏராளமான கோரிக்கைகள் எனக்கு வந்தன. பொதுமக்களின் கருத்தை மதிக்கும் வகையில், கேல் ரத்னா விருது இனிமேல் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும்
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு அர்ஜுனா, ராஜீவ்காந்தி கேல் ரத்னா, துரோணாச்சார்யா ஆகிய விருதுகளை வழங்கி மத்திய அரசு கௌரவித்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமான ஆகஸ்ட் 29ம் தேதி, விளையாட்டுத்துறையில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது, வழங்கப்படும். கடந்த ஆண்டு, இந்திய கிரிக்கெட் வீரா் ரோஹித் சா்மா, மாரியப்பன் தங்கவேலு, மகளிா் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா ஆகிய ஐந்து பேருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
I have been getting many requests from citizens across India to name the Khel Ratna Award after Major Dhyan Chand. I thank them for their views.
— Narendra Modi (@narendramodi) August 6, 2021
Respecting their sentiment, the Khel Ratna Award will hereby be called the Major Dhyan Chand Khel Ratna Award!
Jai Hind! pic.twitter.com/zbStlMNHdq
”ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதின் பெயரை மேஜர் தயான்சந்த் விருது என மாற்ற இந்தியா முழுக்க இருந்து ஏராளமான கோரிக்கைகள் எனக்கு வந்தன. பொதுமக்களின் கருத்தை மதிக்கும் வகையில், கேல் ரத்னா விருது இனிமேல் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருது என அழைக்கப்படும்” எனப் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.
இந்திய ஹாக்கி விளையாட்டு வீரரான தயான் சந்த், 1926 முதல் 1949 வரை சர்வதேச ஆட்டங்களில் விளையாடினார். 185 ஆட்டங்களில் 570 கோல்கள் அடித்தார். இவர் பங்கேற்ற மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்திய ஹாக்கி அணி தங்கம் வென்றது. தயான் சந்த் பிறந்த நாளான ஆகஸ்ட் 29, இந்தியாவில் தேசிய விளையாட்டுத் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
