“இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதே நீதி” - ராமதாஸ்
இலங்கை தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது தான் சரியானது ஆகும். ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகள் எல்லோரும், சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள். ஆகவே, அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க முடியாது’ என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “மத்திய அரசின் இந்த அறிவிப்பை ஏற்றக்கொள்ள முடியாது. திருச்சி கொட்டப்பட்டு, அகதிகள் முகாமை சேர்ந்தவர்கள் தங்களுக்கு இந்தியக் குடியுரிமை வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிபதி, அவர்களது விண்ணப்பத்தை, மத்திய அரசுக்கு அனுப்பி அவர்களுக்குக் குடியுரிமை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு, திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டார். அந்த விண்ணப்பங்கள் மீது, நடவடிக்கைகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீது, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இலங்கை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க ஆணையிட்டு ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது, மத்திய அரசு சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், இந்தியாவில் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்றும், அவர்களுக்குக் குடியுரிமை வழங்க முடியாது என்றும் கூறியிருக்கிறார்.
மத்திய அரசின் இந்த நிலைப்பாடு தவறானது. இந்தியாவுக்குள் பாஸ்போர்ட், தங்கும் அனுமதி (விசா) போன்ற ஆவணங்கள் இல்லாமல் வந்தவர்கள், உரிய ஆவணங்களுடன் இந்தியாவுக்கு வந்தும், தங்கும் அனுமதி காலம் முடிந்த பிறகும் இந்தியாவுக்குள் தங்கி இருப்பவர்கள் ஆகியோர் தான் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று இந்தியச் சட்டம் கூறுகிறது. இந்த வரையறை இலங்கைத் தமிழ் அகதிகளுக்குப் பொருந்தாது. இலங்கைத் தமிழ் அகதிகள் எவரும் தங்களின் சொந்த நாட்டை விட்டுவிட்டு சொகுசு வாழ்க்கை வாழ வேண்டும் என்பதற்காக இந்தியாவிற்கு வந்து குடியேறியவர்கள் இல்லை. இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படைகளுக்கும் கடந்த 1980களின் தொடக்கத்திலிருந்து 2009ம் ஆண்டு வரை போர் நடைபெற்றபோது சிங்களப் படையினர் நடத்திய இனப்படுகொலைகளில் உயிர் பிழைப்பதற்காகவும், சிங்களப் படையினரின் பாலியல் அத்துமீறல்கள், உடல் ரீதியிலான கொடுமைகள் ஆகியவற்றிலிருந்து தப்பிப்பதற்காகவும் தான் அவர்கள் இந்தியாவுக்குள் வந்தனர். அவர்கள் இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையவில்லை. கடல்வழியாக வந்தவர்கள் காவல்துறையினரிடம் சரணடைந்து, மத்திய, மாநில அரசுகளின் கண்காணிப்பில் தான் அவர்கள் காலம் கழித்து வருகின்றனர். அவர்கள் எந்த சட்டவிரோத செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர்களைச் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று குற்றஞ்சாட்டுவது தவறாகும்.
சொந்த நாட்டில் போரோ, இனம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான கொடுமைகளோ இழைக்கப்படும் போது, அந்த நாட்டைச் சேர்ந்த மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுவது இயல்பு. அவ்வாறு தஞ்சம் புகுந்த மக்களைப் பாதுகாப்பதும், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் வந்த நாட்டிலேயே குடிமகன்களாக வசிக்க விரும்பினால், சில நிபந்தனைகளுக்குட்பட்டு குடியுரிமை வழங்குவதும் பல பத்தாண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்கு வகை செய்வதற்காகவே 1951ஆம் ஆண்டில் ஐ.நா. அகதிகள் உடன்படிக்கை உருவாக்கப்பட்டது. அதில் இந்தியா இன்னும் கையெழுத்திடவில்லை என்பதாலும், இந்தியாவில் அகதிகள் குறித்த தேசியக் கொள்கை இல்லாததாலும் தான் இந்தியாவுக்குள் தஞ்சம் புகும் அகதிகள் அனைவரும் சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.
இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. எங்கு மனித உரிமை மீறல்கள் நடந்தாலும் உடனடியாக குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறது. அத்தகைய நாடு அகதிகளுக்கு வாழ்வளிப்பதற்கான உடன்படிக்கையில் கையெழுத்திடாததும், அவர்களைச் சட்டவிரோத குடியேறிகள் என்று கூறுவதும் இந்தியாவின் உயரத்திற்கு ஏற்றதல்ல. அதுமட்டுமின்றி மதம், இனம், மொழி ஆகியவற்றின் பெயரால் சொந்த நாடுகளில் கொடுமைக்கு உள்ளாகி இந்தியாவில் நீண்டகாலமாகத் தங்கியிருப்பவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்பட்டு வருகிறது. அந்த உரிமையை இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து மதம், இனம் ஆகியவற்றின் பெயரால் கொடுமைகளுக்கு ஆளாகி, இந்தியாவுக்குக் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்வந்தவர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படும் போது, இலங்கையிலிருந்து வந்த தமிழ் அகதிகளுக்கு மட்டும் அந்த உரிமை மறுக்கப்படுவது சரியல்ல. எனவே, இலங்கை தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்குவது தான் சரியானது ஆகும். ஈழத்தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோரி சட்டப்பேரவையில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
